ஸ்டார்ட் ஆகலை... காரை கோடரியால் கொத்தி கிழித்த இத்தாலியர்!
கார் ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரமடைந்த, இத்தாலியர் ஒருவர் கோடரியால் தனது காரை சரமாரியாக கொத்தி கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் லிசோன் நகரை சேர்ந்தவர் ஸ்பார்டகோ காபன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் புதிய ஃபியட் 500 காரை வாங்கியுள்ளார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் அவர் அலுவலகம் செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்துள்ளார். ஆனால், அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அவர் வீட்டிலிருந்த கோடரி போன்ற ஆயுதத்தை எடுத்து வந்து கார் முழுவதும் சரமாரியாக குத்தி கிழித்துவிட்டார். இதனால், அந்த கார் கடுமையாக சேதம் அடைந்தது. அக்கம் பக்கத்தினர் காபனின் செயலை கண்டு பயந்து போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், காபனை பிடித்து விசாரித்ததில், அலுவலகத்துக்கு தாமதமானதால், ஆத்திரத்தில் காரை கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். மேலும், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் மனநல மையத்தில் காபனை போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பஸ்சில் வரும்போது அலுவலகத்துக்கு பலமுறை தாமதமாக சென்றதால் காபனை உயரதிகாரி ஏற்கனவே எச்சரித்திருந்தாராம். இதனால்தான், அவர் புதிய காரை வாங்கியுள்ளார். ஆனால், காரும் ஸ்டார்ட் ஆகாததால், அலுவலகத்துக்கு தாமதமடைவதை எண்ணி ஆத்திரத்தில் காரை கோடரியால் கொத்தியதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.


Click it and Unblock the Notifications








