அடுத்த ஆண்டு புதிய எலக்ட்ரிக் பஸ்களை களமிறக்கும் அசோக் லேலண்ட்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் ஆப்டேர் எலக்ட்ரிக் பஸ்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் பஸ்களை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் 75 பங்குகளை அசோக் லேலண்ட் நிறுவனம் வைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டிலேயே ஆப்டேர் பஸ்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக அசோக் லேலண்ட் தெரிவித்திருந்தது. அதுகுறித்து செய்தியும் வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டு எம்பி.,யும் அந்நாட்டு வர்த்தகம், புதுமை மற்றும் திறன்கள் துறை செயலாளருமான வின்ஸ் கேபிள் நேற்று சென்னையிலுள்ள அசோக் லேலண்ட் தலைமையகத்துக்கு வருகை தந்தார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் தாசரி, இந்தியாவில் ஆப்டேர் பஸ் தயாரிப்பை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இரண்டு மாடல்கள்
இந்தியாவில் ஆப்டேர் நிறுவனத்தின் சோலோ மற்றும் வெர்சா ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தமிழக ஆலையில் தயாரிப்பு?
தமிழகம் அல்லது ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரிலுள்ள ஆலையில் இந்த புதிய பஸ்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

முதலீடு
இந்த புதிய பஸ் தயாரிப்புக்காக இதுவரை ரூ.246 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான முதலீடு தேவைப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஸ்களுக்கு தேவையான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிகளை சீனா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிராண்டு
ஆப்டேர் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் பஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் இந்தியாவில் அசோக் லேலண்ட் பிராண்டிலேயே விற்பனைக்கு வரும்.

அறிமுகம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் பஸ் கண்காட்சியில் சோலோ மற்றும் வெர்சா எலக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








