ஆட்டோபான் சாலையில் கார் ஓட்ட வரும் வெளிநாட்டவரிடம் கட்டணம் வசூலிக்க முடிவு!
ஜெர்மனியின் ஆட்டோபான் விரைவு சாலைகளில் கார் மற்றும் பைக்குகளை ஓட்டுவதற்கு வரும் வெளிநாட்டவரிடம் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலக ஆட்டோமொபைல் பிரியர்களின் மனங்கவர்ந்த இடங்களில் ஒன்றாக ஜெர்மனி நாட்டின் ஆட்டோபான் விரைவு நெடுஞ்சாலைகள் விளங்குகின்றன. இந்த விரைவு சாலைகளில் கார் மற்றும் பைக்கில் பறந்து பார்ப்பதற்காகவே அங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், அந்நாட்டு சுற்றுலாத் துறையிலும் நல்ல வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில், வருவாயை பெருக்கும் வகையில் ஆட்டோபான் சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு வரும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களை அனுமதிக்க சாலை பயன்பாட்டு வரி வசூலிக்க ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வரைவுத் திட்டத்தை ஒன்றை ஜெர்மனி நாட்டின் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, ஆட்டோபான் சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட உள்ளது.
10 நாள் செல்லத்தக்க அட்டைக்கு(பாஸ்) 10 யூரோக்களும், 2 மாதங்கள் செல்லத்தக்க அட்டைக்கு 20 யூரோக்களும் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு செல்லத்தக்க அட்டைக்கு 90 யூரோக்களை கட்டணமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, வாகனத்தின் வகை, எஞ்சின் திறன், எத்தனை ஆண்டு ஓடிய வாகனம் மற்றும் எமிசன் அளவு ஆகியவற்றை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும்.
வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் இந்த கட்டண முறையை அமலுக்கு கொண்டு வர ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயை ஆட்டோபான் சாலைகளை பராமரிப்பதற்கும், புதிய ஆட்டோபான் சாலைகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3.5 டன் எடைக்கும் குறைவான வாகனங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications








