நியூஸ் ரவுண்டப்... ஆட்டோமொபைல் துறையின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு
ஆட்டோமொபைல் துறையின் பல நிகழ்வுகளை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆட்டோமொபைல் நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இன்ஸ்யூரன்ஸ் வாங்குவதற்காக புகாட்டி காரை ஏரியில் மூழ்கடித்து கம்பி எண்ணப் போகும் உரிமையாளர், புனே, சகன் ஆலையில் புதிதாக ரூ.4,000 கோடியை முதலீடு செய்யப் போகும் மஹிந்திரா உள்ளிட்டவை உள்பல பல முக்கிய செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.
செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

2015 ஃபோர்டு மஸ்டாங் உற்பத்தி துவங்கியது
புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் காரின் உற்பத்தி அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள ப்ளாட் ராக் அசெம்பிளி ஆலையில் துவங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய கார் விரைவில் டீலர்களுக்கு வர இருப்பதால் வாடிக்கையாளர்களிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆறாம் தலைமுறை மாடலில் முதல்முறையாக வலது புற டிரைவிங் கொண்ட மாடலையும் ஃபோர்டு சோதனை செய்து வருவதாக வெளியானத் தகவல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மஸ்டாங் பிரியர்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க முடிவு
மாதாமாதம் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அமைச்சரவையை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கியது. இதேபோன்று, டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கி எண்ணெய் நிறுவனங்கள் சுயமாக டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம், டீசல் கார் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. விலைவாசியும் கடுமையாக உயரும் நிலை ஏற்படும்.

டட்சனின் புதிய ஹேட்ச்பேக் கார் அறிமுகம்
மாஸ்கோவில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் டட்சன் பிராண்டில் புதிய ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டட்சன் mi- DO என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் காரின் டிசைன் மிக அருமையாக உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரஷ்ய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காரில் 87 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது.

சகன் ஆலை விரிவாக்கம்: மஹிந்திரா
ரூ.4,000 கோடி முதலீட்டில் புனே அருகை சகனில் உள்ள வாகன உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் நடைபெற இருக்கும் விரிவாக்கப் பணிகளுக்கு இந்த புதிய முதலீடு பயன்படுத்தப்படும். இதன்பின்னர் சகன் ஆலையின் முதலீட்டு மதிப்பு ரூ.8,000 கோடியாக உயரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்யூரன்ஸ் மோசடியில் சிக்கிய புகாட்டி உரிமையாளர்
இன்ஸ்யூரன்ஸ் தொகையை வாங்குவதற்கா புகாட்டி வேரான் காரை மோதி விபத்து ஏற்படுத்திய அமெரிக்கர் ஒருவர் 20 ஆண்டுகள் கம்பி எண்ண உள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த புகாட்டி வேரான் கார் உரிமையாளர் ஆன்டி ஹவுஸ் என்பவர் இன்ஸ்யூரன்ஸ் வாங்குவதற்காக தனது காரை வேண்டுமென்றே மோதி விபத்துக்குள்ளாக்கினார். அந்த வழியாக சென்ற ஒருவர் இந்த விபத்தை வீடியோ எடுத்து போலீசில் போட்டுக் கொடுத்தார். அதன் பின்னரே ஆண்டி ஹவுஸ் நாடகமாடியது தெரியவந்தது. தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பிராண்டு மட்டும் முக்கியமல்ல... டீலரும்தான்...!!
கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும்போது இந்தியர்கள் சிறந்த டீலரைஷிப்பை தேர்வு செய்து வாங்குவதாக ஜேடி பவர் நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீலர்ஷிப்பின் சேவைகள், சர்வீஸ் வசதிகள், வாடிக்கையாளர்களிடம் இருக்கும் மதிப்பு போன்றவற்றை பொறுத்தே இந்தியர்கள் வாகனங்களை வாங்க செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தாலும் சரியான சேவை தராத டீலர்களை இந்திய வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய நிசான் லீஃப் எலக்ட்ரிக் காரின் தகவல்கள் கசிந்தது
வரும் 2016ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் இரண்டாம் தலைமுறை நிசான் லீஃப் எலக்ட்ரிக் கார் பற்றியத் தகவல்கள் கசிந்துள்ளன. சாதாரண கார்களை போன்ற தோற்றத்துடன் என்பது முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 299 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ரேஞ்சுடன் வருகிறது. மேலும், குறைந்த தூர ரேஞ்ச் கொண்ட குறைந்த திறன் கொண்ட பேட்டரி மாடல்களிலும் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் டேஷ்போர்டு டிசைன்
2015 மாடல் ஸ்கோடா ஃபேபியா காரின் டேஷ்போர்டு டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் அனலாக் மீட்டர்கள் பெரிதாக கொடுக்கப்பட்டிருப்பதுடன், முக்கியத் தகவல்களை பெறும் வகையில் நடுவில் ஒரு டிஜிட்டல் மீட்டரும் உள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. மிரர்லிங்க் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். இதன்மூலம், மொபைல்போனை யுஎஸ்பி மூலம் இணைத்துக் கொண்டால் மொபைல்போன் திரையில் தெரியும் அத்துனை வசதிகளயும், இன்போடெயின்மென்ட் திரை வழியாக பெற முடியும்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி மற்றுமொரு டீசர் வெளியீடு
மெர்சிடிஸ் பென்ஸ்- ஏஎம்ஜி பிராண்டில் வர இருக்கும் புதிய ஜிடி காரின் மற்றொரு டீசர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 9ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய காரின் வடிவமைப்பு மற்றும் சோதனைகள் 32 மாதங்களில் நிறைவு செய்து அசத்தியுள்ளனர். இந்த புதிய பென்ஸ்- ஏஎம்ஜி ஜிடி கார் -30 டிகிரி முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்து மொத்தம் 15 நாடுகளில் வைத்து சோதனை செய்யப்பட்டிருக்கிறது. 50 டெஸ்ட் டிரைவர்களை வைத்து இந்த கார் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 510 பிஎஸ் பவரை அளிக்கும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் முதல்முறையாக காட்சி தர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








