நேரடியாக மேலெழும்பும் பறக்கும் கார்: பெங்களூர் எஞ்சினியரின் புதிய முயற்சி!
இந்த மாத இறுதியில் ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த ஏரோமொபில் நிறுவனம் உலகின் முதல் தயாரிப்பு நிலை பறக்கும் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, அமெரிக்காவை சேர்ந்த டெர்ராஃப்யூஜியா நிறுவனமும் புதிய டிரான்ஸ்சிஷன் என்ற பறக்கும் காரை 2016ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கார்கள் பறப்பதற்கு ஓடுதளம் தேவைப்படும். ஆனால், தரையிலிருந்து ஹெலிகாப்டர் போன்று நேரடியாக மேலே எழும்பவும், தரையிறங்கும் வசதி கொண்ட பறக்கும் கார் கான்செப்ட் ஒன்றை பெங்களூரை சேர்ந்த விஸ்வநாத்(54) என்ற பொறியாளர் உருவாக்கியுள்ளார். பூச்சிகளின் பறக்கும் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து அதனடிப்படையில் இந்த புதிய பறக்கும் கார் கான்செப்ட்டை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பறக்கும் கார் பற்றி பொறியாளர் விஸ்வநாத் கூறியதாவது," தற்போது புதிய பறக்கும் கார்கள் அனைத்தும் அமெரிக்க விஞ்ஞானி கிளென் கர்டிஸ் 1917ம் ஆண்டு பெற்ற காப்புரிமை தொழில்நுட்பத்தை கருவாகக் கொண்டும் அல்லது அதனை சுற்றிய தொழில்நுட்பத்திலேயே வடிவமைக்கப்படுகின்றன.
ஆனால், அந்த தொழில்நுட்ப விதிகளுக்கு முற்றிலும் மாறுபடும் விதத்தில் பூச்சிகள் பறக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கார் கான்செப்ட்டை உருவாக்கியுள்ளேன். அடுத்த நூற்றாண்டுக்கு பயன்படும் விதத்தில் பறக்கும் கார் தொழில்நுட்ப அறிவியலை நாம் மாற்றி எழுத வேண்டும்.
20 வகையான பூச்சியினங்களின் பறக்கும் முறையை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த பறக்கும் கார் கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் சிறிய அளவிலான இறக்கைகள் மற்றும் சாதாரண வாகன சக்கரங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த கான்செப்ட் மாடல் தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்," என்று கூறினார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏரோ இந்தியா 2015 என்ற விமானவியல் கண்காட்சியில் இந்த புதிய பறக்கும் காரின் கான்செப்ட மாடல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த புதிய பறக்கும் கார் கான்செப்ட் மாடலின் தொழில்நுட்பத்திற்காக ஏற்கனவே 2 காப்புரிமகளை விஸ்வநாத் பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








