பெங்களூர்வாசிகளை பரவசப்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்பீரியன்ஸ் டூர்!
வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும், கார் ஓட்டுவதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்பீரியன்ஸ் டூர் என்ற நிகழ்ச்சியை பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வாகனங்களை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சிகள் மூலம் பிஎம்டபிள்யூ வழங்கி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்பட நாட்டின் 12 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்பீரியன்ஸ் டூர் நிகழ்ச்சி நேற்று பெங்களூரிலுள்ள எம்பஸி சர்வதேச ரைடிங் பள்ளியில் நடந்தது. இதில், பத்திரிக்கையாளர்கள், பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதற்காக, எம்பஸி பள்ளி வளாகத்தில் ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் மேடைகள் வழியாக பிஎம்டபிள்யூ கார்களை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் பரவசமடைந்தனர்.

செடான் கார்களில் இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் எஸ்யூவிகளில் இருக்கும் ஆஃப்ரோடு சிறப்பம்சங்களை விளக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதேபோன்று, கார் ஓட்டுதல் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களின் சிறப்பம்சங்கள் குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதற்கான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், 3 சீரிஸ், 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்கள் மற்றும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்6, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்3 மாடல்களை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை பலர் பெற்றனர்.
பிஎம்டபிள்யூவின் எம் ரக பெர்ஃபார்மென்ஸ் மாடல்களை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை சிலர் பெற்றனர். இது ஒரு புதுவித அனுபவமாக அமைந்ததாகவும், கார் ஓட்டுவதற்கான தன்னம்பிக்கையை அது அதிகப்படுத்துவதாக இருந்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications








