சாலை எச்சரிக்கை குறியீடுகளை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய மொபைல் ஆப்!
சாலை எச்சரிக்கை குறியீடுகள் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை பாஷ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் எச்சரிக்கை குறியீட்டுப் பலகைகள் இருப்பதில்லை. அப்படி எச்சரிக்கை குறியீட்டுப் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும் சாலைகளிலும் அது வாகன ஓட்டிகளின் பார்வையில் தெளிவாக இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படி இருந்தாலும் அதனை வாகன ஓட்டிகள் கவனித்து பின்பற்றுகின்றனரா என்பதும் கேள்விக்குறியான விஷயம்.

இதனால், பல இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்களும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை பாஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மைடிரைவ் அசிஸ்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் சாலையின் வேகக்கட்டுப்பாட்டு அளவு, எச்சரிக்கை குறியீடுகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ல முடியும்.
மேலும், வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டினாலும் இது எச்சரிக்கும். ஓவர்டேக் செய்யக்கூடாத பகுதிகளை பற்றியும் முன்கூட்டியே எச்சரிக்கும். வாய்மொழியாகவும், திரை மூலமாகவும் எச்சரிக்கைத் தகவல்களை வாகன ஓட்டிகளுக்கு தரும் விதத்தில் இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் முக்கிய சாலைகளின் எச்சரிக்கை குறியீடுகள் பற்றியத் தகவல்களை இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் பெற முடியும். எதிர்காலத்தில் இந்த மொபைல்போன் அப்ளிகேஷனில் நாட்டின் பெரும்பாலான சாலையின் எச்சரிக்கைத் தகவல்களை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








