'கோவிந்தா' போடுவதை நிறுத்திய நிறுவனங்கள்: விற்பனையில் ஏற்றம்
உற்பத்தி செலவீனம், ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம் என்று கிடைத்த காரணங்களை காட்டி அவ்வப்போது விலையை உயர்வை கார் நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கமாக இருந்து வந்தது. மேலும், ஒரு நிறுவனம் கார் விலையை உயர்த்தி அறிவித்தால், பிற நிறுவனங்களும் தொடர்ந்து கூட்டத்தில் கோவிந்தா போடுவதை வழக்கமாக கொண்டிருந்தன.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலை உயர்வு என்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன கார் நிறுவனங்கள். இதனால், முன்பதிவு செய்துவிட்டு வரும் வாடிக்கையாளர்கள் கார் கைக்கு டெலிவிரி கிடைக்கும் வரை திக் திக்.,தான். இந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக கார் விலை உயர்த்தபடாமல் இருந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மேலும், கார் விலை உயர்வு அறிவிப்புகள் காதில் விழாமல் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தற்போது ஆர்வமுடன் ஷோரூம்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மாடலை அச்சமின்றி எடுத்துச் செல்கின்றனர். இதன் எதிரொலியால், கார் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது. நம் நாட்டில் 50 சதவீதம் அளவுக்கு கார்களை விற்பனை செய்து வரும் மாருதி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில்தான் கடைசியாக விலை உயர்வை அறிவித்தது.
இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் விலை அறிவிப்பை வெளியிட்டதுடன் சரி. அங்கிருந்தும் எந்த சப்தமும் இதுவரை இல்லை. மேலும், விலை உயர்வு மட்டுமில்லாமல், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி 4 முதல் 6 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, பல நிறுவனங்கள் கார் விலையை கணிசமாக குறைத்தன.
இதன்மூலம், கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் கார் விற்பனை ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்தம் 8.8 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், விற்பனை 4.09 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில்," கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் கார்களுக்கான தள்ளுபடி சராசரியாக 20 சதவீதம் அதிகம். இதனால், கார்களை வாங்க வாடிக்கையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் மனநிலையை மாற்றிவிடாதபடி, விலை உயர்வையும் தவிர்த்து வருகிறோம்," என்று கூறினார்.
இந்தநிலையில், வரும் டிசம்பர் மாதத்துடன் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளுக்கான காலக்கெடு முடிவடைகிறது. ஒருவேளை வரிச்சலுகையை மத்திய அரசு நீட்டிக்காவிட்டால், விலை உயர்வை கார் நிறுவனங்கள் கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








