வரிச்சலுகை காலக்கெடு முடிகிறது... 1ந் தேதி முதல் கார் விலை உயரும் வாய்ப்பு!
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கார்களுக்கான வரிச்சலுகை காலக்கெடு வரும் 30ந் தேதியுடன் முடிவடைவதால், வரும் 1ந் தேதி முதல் கார் மற்றும் பைக்குகளின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார், பைக்குகளுக்கான உற்பத்தி வரியில் சலுகை அறிவிக்கப்பட்டது. சிறிய வகை கார்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதேபோன்று, எஸ்யூவி ரக வாகனங்கள் மீதான வரி 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அறிவித்த இந்த வரிச்சலுகை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் கார் மற்றும் பைக்குகள் விலையை குறைத்தன.
வரும் 30ந் தேதியுடன் இந்த வரிச்சலுகைக்கான காலக்கெடு முடிவடைகிறது. வரிச்சலுகை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், ஜூலை 1ந் தேதி முதல் கார்கள் மற்றும் பைக்குகள் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
மேலும், அடுத்த மாதம்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, இதில் தெளிவான நிலையை கார் நிறுவனங்கள் எடுப்பதற்கு வசதியாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், வாகன மார்க்கெட் ஏற்கனவே மந்தமாக இருப்பதால், இந்த வரிச்சலுகை நீட்டிக்க வேண்டும் என்றும் பல முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








