இந்தியாவில் சிகரெட்டைவிட கார்கள் மீது அதிக வரி: ஹோண்டா அதிருப்தி
இந்தியாவில் சிகரெட்டைவிடை கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக ஹோண்டா கார் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை மூத்த அதிகாரி ஞானேஸ்வர் சென் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்டோமொபைல் துறையின் மீதான மத்திய அரசின் கொள்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, ஞானெஸ்வர் சென் கூறியதாவது. "இன்றைய நிலையில் இந்தியாவில் தீங்கு விளைக்கும் பொருட்களான சிகரெட் போன்றவற்றை விட கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இது கார் மார்க்கெட்டிற்கு மிகுந்த சவாலான விஷயமாக உள்ளது.
கலால் வரி, வாட் வரி, சாலை வரி, கல்வி வரி என கார்கள் மீது பல வரிகள் விதிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு கார் ஆலையிலிருந்து உற்பத்தியாகி வெளிவரும்போது 100 ரூபாய்க்கு அடக்கம் ஆகிறது என்று வைத்துக் கொண்டால், அதன் மீது சுமத்தப்படும் வரிகள் மூலம் அதனை வாடிக்கையாளர்கள் 150 முதல் 175 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது.
50 முதல் 70 சதவீதம் வரை கார்களின் விலை கூடுதலாகிறது. இதுதவிர, போக்குவரத்து செலவீனம் மற்றும் டீலர் மார்ஜின் போன்றவையும் இருக்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் வாட் வரியும் வேறுபடுகிறது. சில மாநிலங்களில் 12.5 சதவீதமும், சில மாநிலங்களில் 16 சதவீதம் வரையிலும் விதிக்கப்படுகிறது.
மேலும், டீசலுக்கான மானியம் வழங்குவதிலும் தெளிவான கொள்கை தேவை. டீசலுக்கான மானியம் தொடருமா என்பதையும் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். டீசல் கார்களுக்கான முதலீட்டை அதிகரிப்பது குறித்து முடிவு எடுப்பதற்கு இதுபோன்ற தெளிவான கொள்கை முடிவுகள் தேவை.
மத்திய அரசின் எரிபொருள் கொள்கையும் கார் தொழிற்துறையை நேரடியாக பாதிக்கிறது. மாதாமாதம் பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல்கள் செய்யப்படுவதால், எந்த வகை எரிபொருள் கார்களை கூடுதலாக தயாரிக்க வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறி வருகிறோம்.
பிப்ரவரியில் கார்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட போதிலும், கார் மார்க்கெட்டில் வளர்ச்சி காணப்படவில்லை. மாறாக, மந்த நிலையே தொடர்கிறது. மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திட ஆட்டோமொபைல் துறை விரும்புகிறது. இதன்மூலம், தெளிவான கொள்கை முடிவுகள் கிடைக்கும். அதன் பிறகே கார் மார்க்கெட்டில் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வழி பிறக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








