இந்தியாவில் 'ஒருங்கிணைந்த' கார் கிராஷ் டெஸ்ட் கட்டாயமாகிறது!
இந்தியாவில் ஒருங்கிணைந்த கார் கிராஷ் டெஸ்ட் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான, கிராஷ் டெஸ்ட் மையங்களை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போது நம் நாட்டில் விற்பனையாகும் கார்கள் அனைத்தும், முன்புற மற்றும் பின்புற கிராஷ் டெஸ்ட் போன்ற இருவிதமான பாதுகாப்பு சோதனையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு சான்று வழங்கப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மோதல் சோதனைகளை கொண்ட, ஒருங்கிணைந்த கிராஷ் டெஸ்ட் சோதனைகளை இந்தியாவில் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பணிகள் தீவிரம்
தேசிய வாகன சோதனை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பு (NATRiP) ஒருங்கிணைந்த கார் டெஸ்ட் சோதனை மையங்களை அமைக்கவும், வழிகாட்டு முறைகளை தயாரிப்பதிலும், தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளர் கூட்டமைப்பு(SIAM) மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் இந்த குழு தற்போது பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து பேச்சு நடத்தி வருகிறது.

சென்னையிலும் மையம்
சென்னை, ஒரகடத்தில் உள்ள சர்வதேச வாகன ஆராய்ச்சி மையத்தை(GARG.,) புதிய ஒருங்கிணைந்த கிராஷ் டெஸ்ட் சோதனைகள் நடத்துவதற்கான வசதிகளுடன் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டமைப்பு
பல்வேறு கோணங்களில் கார்களை மோதச் செய்து, அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை துல்லியமாக கணக்கிடுவதற்கும், அதனை வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கான வசதிகளுடன் சென்னை மையத்தை மேம்படுத்துவதற்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலைநாட்டுக்கு இணையாக...
யூரோஎன்சிஏபி, யுஎஸ்ஏஎன்சிஏபி உள்ளிட்ட மேலைநாடுகளில் நடத்தப்படும் மோதல் சோதனைகளுக்கு இணையான அம்சங்கள் கொண்டதாக இந்த புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகள் இருக்கும். இந்த ஒருங்கிணைந்த கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் அமையும். இதன்மூலம், இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படும் என்று நம்பலாம்.

அடுத்த ஆண்டு அமல்
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த சோதனை மையங்கள் மூலம் கார்களுக்கான ஒருங்கிணைந்த கிராஷ் டெஸ்ட் செய்வதற்கான பணிகள் துவங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








