"இந்தியாவுக்கு போதுமான பாதுகாப்பு அம்சங்கள் டட்சன் கோ காரில் உள்ளது"!!
இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை டட்சன் கோ கார் கொண்டிருக்கிறது என நிசான் இந்தியா தலைவர் சிகார்டு தெரிவித்துள்ளார். குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டட்சன் கோ கார் தர மதிப்பீட்டில் பூஜ்யத்தை பெற்றது. மேலும், ஏர்பேக் பொருத்தினாலும் இந்த கார் ஓட்டுனருக்கு பாதுகாப்பு வழங்காது என்று குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்தது.
அத்துடன், டட்சன் கோ காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துமாறு நிசான் குழுமத்தின் சிஇஓ கார்ல் கோஸனுக்கு கடிதம் அனுப்பியது. இதனால், டட்சன் கோ காரை முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை டட்சன் கோ கார் கொண்டிருக்கிறது என நிசான் இந்தியா தலைவர் கில்லாம் சிகார்டு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அம்சங்கள்
பிரேக் செயல்திறன், சிறப்பான தரைப் பிடிப்பு, நவீன சஸ்பென்ஷன் அமைப்பு, நீண்ட தூரம் வெளிச்சம் தரும் ஹெட்லைட் மற்றும் ஓட்டுனருக்கு அயர்ச்சி தராத இருக்கை என சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கிறது என்று சிகார்டு தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம்
மாருதி ஆல்ட்டோ 800 காரில் கூட ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படும் நிலையில், டட்சன் கோ காரில் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற வசதிகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை வழங்குவதாகவே இருக்கிறது. இந்த பாதுகாப்பு வசதிகளை ஆப்ஷனலாக வழங்கினாலும், அது பயன்தராது என்று குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்திருப்பதும் டட்சன் கோ காருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த நெருக்கடி
நிசான் நிறுவனம் டட்சன் கோ காரின் பாதுகாப்பு அம்சங்களை போதுமானது என்று சொல்லியிருந்தாலும், அடுத்த ஆண்டு இந்தியாவிலும் கிராஷ் டெஸ்ட் நடைமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன. எனவே, அதற்கு தக்கவாறு அந்த காரின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிசானுக்கு ஏற்படும். நிசானுக்கு மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும் கார்களில் மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம் அல்லது ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர ஆக்செஸெரீயாக பொருத்தி விற்பனைக்கு வரும்.

டட்சன் எம்பிவி கார்
அடுத்த சில மாதங்களில் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அந்த காரிலும் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற வசதிகள் இருக்காது என்று தெரிகிறது. இதனால், டட்சன் கார்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








