கார், பைக்குகளுக்கான வரிச்சலுகை மேலும் 6 மாதங்களுக்கு தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு
கார், பைக்குகளுக்கு வழங்கப்பட்டு வரும் உற்பத்தி வரிச்சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கார்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டன.

சிறிய வகை கார்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோன்று, எஸ்யூவி ரக வாகனங்கள் மீதான வரி 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அறிவித்த இந்த வரிச்சலுகைகள் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் கார் மற்றும் பைக்குகள் விலையை குறைத்தன.
இதற்கான, காலக்கெடு வரும் 30ந் தேதியுடன் முடிவடைய இருந்தது. இதனால், வரும் 1ந் தேதி முதல் கார் மற்றும் பைக்குகளின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டது.
கார் மார்க்கெட்டில் மந்தநிலை நீடிப்பதால் இந்த வரிச்சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கார், பைக்குகளுக்கான வரிச்சலுகை தொடர்ந்து 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி," வரும் டிசம்பர் 31ந் தேதி வரை வாகனங்கள் மீதான உற்பத்தி வரிச் சலுகைகள் நீட்டிக்கப்படுகிறது.
இந்த வரிச்சலுகை நீட்டிப்பு பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் என நம்புகிறோம். இதன்மூலம், பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு ஏற்பட்டால், இந்த குறுகிய கால வருவாய் இழப்பு அரசுக்கு ஒரு பொருட்டாக இருக்காது," என்று கூறினார்.
வாகன உற்பத்தி மீதான வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கும், பண்டிகை கால கார், பைக் விற்பனைக்கும் இந்த வரிச்சலுகை நீட்டிப்பு மிகுந்த பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








