ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களின் அறிமுகத்தை ஒத்திப்போட்ட ஃபியட்!
மார்க்கெட்டில் நிலவும் சுணக்கமான நிலையை கருதி ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களின் அறிமுகத்தை ஃபியட் ஒத்திப்போட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜீப் பிராண்டு தற்போது ஃபியட் நிறுவனத்தின் அங்கமான கிறிஸ்லர் கார் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் திட்டமிட்டது.

இதற்காக, ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்களை கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் வைத்து சோதனை நடத்தி வந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் திட்டமிட்டிருந்தது.
ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்கள் சொகுசு ரகத்தை சேர்ந்தவை. எனவே, தற்போது மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலையை மனதில் கொண்டு ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களின் அறிமுகத்தை ஃபியட் ஒத்தி போட்டுள்ளது.
இதுகுறித்து ஃபியட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாகேஷ் பசவனஹள்ளி கூறுகையில்," புதிய மாடல்களை கொண்டு வருவதில் முனைப்புடன் இருக்கிறோம்.
ஆனால், கார் மார்க்கெட்டில் நிலவும் சுணக்க நிலை இந்த ஆண்டு அக்டோபர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே, ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும்போது, சரியான சமயத்தில் ஜீப் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








