குஜராத்தை கார் ஏற்றுமதி மையமாக உருவாக்க பிரதமர் மோடி விருப்பம்
குஜராத்தை கார் ஏற்றுமதி கேந்திரமாக ஃபோர்டு நிறுவனம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இரண்டாவது புதிய கார் ஆலையை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைத்து வருகிறது.

குஜராஜ் முதல்வராக மோடி பதவி வகித்தபோது இந்த புதிய ஆலைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.4,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய கார் ஆலை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருக்கும் சனந்த் தொழிற்பேட்டையில்தான் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த புதிய தொழிற்சாலை மூலம் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி திறன் இரு மடங்காக அதிகரிக்கும்.
இந்த நிலையில், கடந்த 1ந் தேதி ஃபோர்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக மார்க் ஃபீல்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார். அவர் இந்தியாவில் வர்த்தகத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்
இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் மார்க் ஃபீல்ட்ஸ் சந்தித்துப் பேசினார். முதலில் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற இருந்த சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது. அப்போது, குஜராத்தை கார் ஏற்றுமதி கேந்திரமாக ஃபோர்டு நிறுவனம் மாற்ற வேண்டும் என்று மார்க் ஃபீல்ட்ஸிடம் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, சனந்த் தொழிற்பேட்டையில் அமைக்கப்படும் தொழிற்சாலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளதற்கான நடைமுறைகள் மிக எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை தொழிற்சாலையிலிருந்து 50 நாடுகளுக்கு ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








