கார் டிரைவரின் முகத்தை அடையாளம் காணும் ஃபோர்டு கார் தொழில்நுட்பம்!
கார்களில் நித்தமும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி வருகின்றன. இருப்பினும், அதிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தி, தங்கள் துறையிலேயே முதல்முறையாக என்ற பெருமையை பெறுவதற்காக பல முன்னணி கார் நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில், ஒரு புதுமையான கார் தொழில்நுட்பத்தை இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஃபோர்டு உருவாக்கி வருகிறது. மொபைல் இன்டிரியர் இமேஜிங் என்ற பெயரிலும், சுருக்கமாக மொபி என்று கூறப்படும் இந்த தொழில்நுட்பம் கார் உரிமையாளருக்கு பல்வேறு வசதிகளை விரல் நுனியில் வழங்கும்.

அதில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பமாக முகத்தை வைத்து ஓட்டுனரை அடையாளம் காணும் வசதி இந்த மொபி சாஃப்ட்வேரில் இருக்கும். கார் திருடுபோவதை தவிர்க்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை, அடையாளம் தெரியாத நபர்கள் காரை இயக்க முற்பட்டால் அவரது முகம் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கார் உரிமையாளரின் மொபைல்போனுக்கு தகவல் பறந்துவிடும். இந்த வசதி கார் திருட்டை தடுக்க உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, குறிப்பிட்ட ஒருவரின் விருப்பமான இசை மற்றும் வசதிகளை உணர்ந்து கொண்டு செயல்படும் வகையில் இருக்கும். இதுபோன்று, காரை இயக்குபவருக்கு அதிக தகவல்களை வழங்கும் வகையில் மொபி தொழில்நுட்பத்தை ஃபோர்டு- இன்டெல் கூட்டணி மிக தீவிரமாக உருவாக்கி வருகின்றன. எதிர்காலத்தில் ஃபோர்டு கார்களில் வர இருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நுட்பமாக இருக்கும் என ஃபோர்டு தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








