கார்களுக்கு ரீஃபைனான்ஸ் வழங்கும் ஆக்சிஸ் வங்கி!
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மறு கடனுதவி (ரீஃபைனான்ஸ்) வழங்கும் புதிய கடன் திட்டத்தை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
கார் கடன் வழங்குவதில் ஆக்சிஸ் வங்கி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற போட்டியாளர்களால் கடும் சந்தைப் போட்டியை ஆக்சிஸ் வங்கி சந்தித்து வருகிறது.

தனது வர்த்தகத்தை வலுவாக்கிக் கொள்ளும் விதத்தில் புதிய கார்களுக்கு மட்டுமின்றி தற்போது யூஸ்டு கார்களுக்கு ரீஃபைனான்ஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஏற்கனவே காருக்கு வாங்கிய கடனை சரியாக கட்டி முடித்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்க ஆக்சிஸ் வங்கி முடிவு செய்துள்ளது. காரை மதிப்பீடு செய்து அதன் மதிப்பில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கடன் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களின் கடன் செலுத்திய விதத்தை ஆய்வு செய்த பிறகே கடன் வழங்கப்படுவதால், அபாயம் குறைவு என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வங்கிகள் வழங்கும் தனிநபர் கடனை விட இதற்கு வட்டி வீதம் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications








