100 வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தால் போதும்... இனி கார்களுக்கு ரீகால்!
குறிப்பிட்ட கார் மாடலில் இருக்கும் பிரச்னை குறித்து 100 வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தால் ரீகால் அறிவிப்பு வெளியிட வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான விதிமுறைகளையும், அபராதங்களையும் விதிக்கும் முறையையும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஆணையமும் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, புதிய போக்குவரத்து விதிகளை வகுக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட கார் அல்லது வாகனங்களில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்னை குறித்து 100 வாடிக்கையாளர்கள் புகார் அளித்தாலே, ரீகால் அறிவிப்பு வெளியிடுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது கார் தயாரிப்பாளர்கள் தாமாக முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், புதிய சட்டம் அமலுக்கு வரும்போது புகார்களை பெற்றவுடன் வாகன ஒழுங்கு முறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தானாகவே குறிப்பிட்ட கார் மாடலை ரீகால் செய்ய உத்தரவிடும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
வாகனங்களில் ஏற்படும் தயாரிப்பு நிலை குறைபாடுகளை இலவசமாக கார் நிறுவனங்கள் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும். இதன்மூலம், வாகன தயாரிப்பு தரம் வெகுவாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








