அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்தி வைத்த எச்எம்!
பழமை வாய்ந்த அம்பாசடர் காரின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய கார் மார்க்கெட்டில் தனி முத்திரை பதித்த மாடல் என்றால் அது அம்பாசடர்தான். மேற்கு வங்க மாநிலம், உத்தர்பாராவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையிலிருந்து இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

ஒரு நேரத்தில் அரசியல்வாதிகளின் அந்தஸ்துக்கான காராக விளங்கிய அம்பாசடர், டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் புதிய கார் மாடல்களுடன் போட்டி போட முடியாமல் விற்பனையில் பின்தங்கியது.
கடந்த சில ஆண்டுகளாகவே அம்பாசடரில் மாற்றங்களை செய்து வெளியிட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முயற்சித்து வந்தது. ஆனால், அதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த கடன் சுமை காரணமாகவும், விற்பனை சுத்தமாக நின்று போனதால் வருவாய் இல்லாமல் போனதாலும் அம்பாசடர் காரின் உற்பத்தியை சனிக்கிழமை (24.05.2014) முதல் நிறுத்தி வைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உத்தர்பாரா ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை ஊதியமில்லா விடுப்பில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அனுப்பியுள்ளது. எதிர்கால திட்டங்கள் குறித்து அந்த நிறுவனத்திடமிருந்து இதுவரை சரியான தகவல் இல்லை .


Click it and Unblock the Notifications








