ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் இந்தியாவுக்கும் வருகிறதாம்... இப்ப சந்தோஷம்தானே!!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், எம்பிவி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் ஹோண்டா மொபிலியோவுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்து ஓர் இனிப்பான செய்தியும் ஹோண்டா வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது. அதாவது, இந்தோனேஷியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம். இது உறுதியாக நம்பப்படுகிறது. ஏனெனில், மொபிலியோவின் ஆர்எஸ் என்ற கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்ட மாடல் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போது அறிமுகம்?
இந்த மாதம் சாதாரண மொபிலியோ எம்பிவி கார் விற்பனைக்கு வரும் நிலையில், இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்ட மொபிலியோ ஆர்எஸ் மாடல் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அம்சங்கள்
பை- ஃபோகல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குள், முன்பக்கம் புதிய குரோம் கிரில், புதிய டிசைன் கொண்ட பம்பர்கள், சைடு ஸ்கர்ட், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ஸ்பாய்லர் போன்ற கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் மிக கம்பீரமாக இருக்கும்.

இன்டிரியர்
ஃபாக்ஸ்வுட் ஃபினிஷ், லெதர் அப்ஹோல்ஸ்டரி, 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என செம அசத்தலான இன்டிரியர் அமைப்புடன் இருக்கும். கருப்பு வண்ணத்தில் இன்டிரியர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.

இரு மாடல்கள்
இந்தோனேஷியாவில் சிவிடி டிரான்ஸ்மிஷன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் ஹோண்டா மொபிலியோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை
சாதாரண மொபிலியோ காரைவிட மொபிலியோ ஆர்எஸ் கார் விலை அதிகமாக இருக்கும். சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல் இந்திய மதிப்பில் ரூ.10.76 லட்சம் விலையிலும், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ரூ.10.23 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே விலையை ஒத்ததாகவே இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








