இந்தியா உள்பட உலக அளவில் 2 மில்லியன் அக்கார்டு கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா!
உயிர் காக்கும் காற்றுப் பையில் இருக்கும் பிரச்னை காரணமாக, உலக அளவில் ஹோண்டா அக்கார்டு கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2005ம் ஆண்டு டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட 2 மில்லியன் அக்கார்டு கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளதாக ஹோண்டா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில சமயங்களில் இந்த உயிர்காக்கும் காற்றுப் பைகள் வெடிக்கும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை ஹோண்டா துவங்க இருக்கிறது.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அக்கார்டு கார்களும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. ஆனால், எத்தனை கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல் இல்லை. இதற்கான நடைமுறைகள் விரைவில் துவங்கப்படுகிறது.
பிரச்னைக்குரியதாக கருதப்படும் ஹோண்டா அக்கார்டு கார்களுக்கான உயிர் காக்கும் காற்றுப் பைகளை ஜப்பானை சேர்ந்த தகாதா கார்ப்பரேஷன் நிறுவனம் சப்ளை செய்துள்ளது. இதே நிறுவனம்தான் டொயோட்டா, நிசான் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களுக்கும் உயிர்காக்கும் காற்றுப்பைகளை சப்ளை செய்கிறது.
ஹோண்டாவை தொடர்ந்து இதே பிரச்னைக்காக பிஎம்டபிள்யூ நிறுவனமும் திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








