ஆல்ட்டோ போட்டியாளருக்காக புதிய 1.0 லிட்டர் எஞ்சின்: ஹோண்டா தயாரிக்கிறது
இந்தியாவில் பிரியோவைவிட குறைவான விலையில் சிறிய காரை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என்று ஹோண்டா தெரிவித்திருந்தது. ஆனால், பிரியோவின் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெறும் 74 பிரியோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதால் ஹோண்டா அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் சிறிய கார் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை கையிலெடுக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கு இணையான புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் துவங்கியுள்ளதாக பிரபல வர்த்தக இதழான ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த காருக்காக ஜப்பானில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை வடிவமைக்கும் பணிகளையும் ஹோண்டா துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிவிக்கப்பட்ட விடெக் டர்போ வரைசையிலான புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினாக அது இருக்கலாம் என்ற யூகமும் தற்போது வலுத்துள்ளது. இந்த புதிய எஞ்சின் டர்போ சார்ஜர் துணையுடன் 130 எச்பி பவர் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 1.0 லிட்டர் விடெக் பெட்ரோல் எஞ்சின் டர்போசார்ஜர் இல்லாததாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான பவரை அளிக்கும் விதத்தில் இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் கொண்ட புதிய ஹோண்டா குட்டிக் கார் வரும் 2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
எங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








