தமிழகத்தில் 4 டீலர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்த ஹூண்டாய் மோட்டார்ஸ்!
மோசமான சர்வீஸ் வழங்கியதாக கூறி தமிழகத்தில் 4 டீலர்ஷிப்புகளின் அங்கீகார ஒப்பந்தத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 24 கார் டீலர்களை கொண்டுள்ளது. அதில், மோசமான சர்வீஸ் சேவையை வழங்கியதாக கூறி தமிழகத்தில் உள்ள 4 டீலர்ஷிப்புகளை மூடியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த டீலர்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த எஸ்கேபிஆர் ஹூண்டாய், வேலூரிலுள்ள சுசீ ஹூண்டாய், சேலத்திலுள்ள ரமணி ஹூண்டாய் மற்றும் கோவையிலுள்ள சூர்யபாலா ஹூண்டாய் ஆகிய 4 டீலர்ஷிப்புகளின் அங்கீகாரத்தை ஹூண்டாய் ரத்து செய்துள்ளது.
அதேநேரத்தில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட ஹூண்டாய் டீலர்கள் கூறுகையில்," பெரும் விற்பனை இலக்குகளை நிர்ணயித்து வர்த்தகம் செய்ய கூறுகின்றனர். மார்க்கெட் நிலவரம் சரியில்லாத நிலையில், இதுபோன்று விற்பனை இலக்குகள் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எங்களது நிலையை எடுத்துக் கூறுவதற்கு கூட ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை," என்று கூறினர்.
இந்த நிலையில், ஒவ்வொரு டீலரும் இடம் மற்றும் கட்டடத்திற்காக ரூ.5 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். அதுதவிர, ஒவ்வொரு டீலர்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்த 60லிருந்து 100 பணியாளர்களின் வேலையும் பறிபோயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த சில டீலர்களின் அங்கீகாரத்தை ஹூண்டாய் நிறுவனம் ரத்து செய்தது. ஆனால், இப்பிரச்னையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யுமாறு மத்திய தொழிற்துறை அமைச்சகத்தை ஹூண்டாய் டீலர்கள் சங்கம் அணுகி கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்னை நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் 4 டீலர்களின் அங்கீகாரத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் ரத்து செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








