வரி ஏய்ப்புடன் ஓடிய 1,000 சொகுசு கார்கள் பறிமுதல்: கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி
பெங்களூரில், வரி ஏய்ப்பு செய்து ஓட்டப்பட்ட 1,000 சொகுசு கார்களை கர்நாடக மாநில போக்குவரத்து துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியர் எஸ்டேட் துறையால் செல்வ செழிப்பில் திளைத்து நிற்கும் பெங்களூர் மாநகரில் சொகுசு கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

ஆனால், சொகுசு கார்களுக்கான வரி அதிகம் என்பதால், பெங்களூரில் கார் வாங்குவதை தவிர்க்கின்றனர். மேலும், பலர் பாண்டிச்சேரியிலிருந்து புதிய சொகுசு கார்களை வாங்கி வந்து ஓட்டுகின்றனர். இதனால், கர்நாடக போக்குவரத்து துறைக்கு வரி வருவாயில் அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிற மாநில பதிவு எண்ணுடன் பெங்களூரில் ஓடிய 3,636 கார்களை மடக்கிப் பிடித்து கர்நாடக மாநில போக்குவரத்து துறை சோதனை நடத்தியது. அதில், 1,000 கார்களுக்கு மேல் வரி ஏய்ப்பு செய்து ஓட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வரி ஏய்ப்பு செய்த கார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.14 கோடியை கர்நாடக மாநில போக்குவரத்து துறை அபராதமாக வசூலித்துள்ளது. மேலும், ரூ.3 கோடி வரை அபராதமாக வசூலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநில பதிவு எண் கொண்ட கார்கள் மட்டுமின்றி, கர்நாடகாவை சேர்ந்த பிற மாவட்டங்களிலிருந்து விதிமீறல்களுடன் ஓட்டப்பட்ட கார்களையும் பெங்களூரில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில போக்குவரத்து துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடகாவில் பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை 30 நாட்கள் வரை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பிடிபட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் மாதக்கணக்கிலும், சில கார்கள் ஆண்டுக்கணக்கிலும் ஓடியது விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








