இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான நேரம் வந்துவிட்டது: டொயோட்டா
சொகுசு கார்களுக்கு சரியான மார்க்கெட்டாக இந்தியா பக்குவப்பட்டுவிட்டது; எனவே, லெக்சஸ் பிராண்டின் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது," என்று டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நயோமி இஷி கூறியுள்ளார்.
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஜெர்மன் நாட்டின் கார் நிறுவனங்களின் ஆளுகையின் கீழ் இருந்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களின் கார் விற்பனையும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.

சொகுசு கார்களுக்கான வரவேற்பை கண்டு வியந்திருக்கும் டொயோட்டா, நிசான், ஹோண்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்களும் தங்களது சொகுசு பிராண்டின் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தருணம் பார்த்து காத்திருக்கின்றன. இந்த நிலையில், அதில், முதலாவதாக டொயோட்டா மவுனம் கலைந்துள்ளது.
சொகுசு கார்களை களமிறக்குவதற்கு இந்திய சொகுசு கார் மார்க்கெட் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நயோமி இஷி கூறுகையில்," தற்போது சொகுசு கார் மார்க்கெட்டில் ஏராளமான வாய்ப்புகள் எழுந்துள்ளன. மூன்று ஜெர்மன் பிராண்டுகளும் சிறப்பான வர்த்தகத்தை புரிந்து வருகின்றன. எங்களுக்கு இந்தியாவில் லெக்சஸ் பிராண்டு தேவைப்படுவதாகவே உணர்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 40,000 சொகுசு கார்கள் வரை விற்பனையாகின்றன. மேலும், ஜெர்மன் நாட்டு கார் நிறுவனங்களான ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்கின்றன. இதனால், மிக சரியான விலையில் சொகுசு கார்கள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
லெக்சஸ் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தால், அந்த கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான புதிய உற்பத்தி பிரிவுகளை அமைக்க வேண்டும். அதற்கான பிரத்யேக ஷோரூம்களையும் அமைக்க வேண்டும். கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தால்தான், ஜெர்மன் நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போட முடியும். எனவே, லெக்சஸ் பிராண்டை அறிமுகம் செய்வது குறித்து தீவிர பரிசீலனையில் டொயோட்டா இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








