அனைத்து சொகுசு பஸ்களிலும் கருப்புப் பெட்டி: போக்குவரத்து துறை முடிவு
விமானங்களில் இருப்பது போன்று அனைத்து சொகுசு பஸ்களிலும் கருப்புப் பெட்டி, பயணிகளுக்கான சீட் பெல்ட்டுகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வால்வோ பஸ்கள் அடுத்தடுத்து தீ விபத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இதில், ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், சொகுசு பஸ்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு மாநில போக்குவரத்து துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக, விவாதித்து இறுதி முடிவு எடுப்பதற்காக சிறப்பு கூட்டம் ஒன்று விரைவில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு மாநில போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், வால்லோ, ஸ்கானியா உள்ளிட்ட பஸ் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
விபத்துக்களுக்கான காரணத்தை சரியாக கண்டறியும் விதத்தில் கருப்பு பெட்டி, பயணிகளுக்கான சீட் பெல்ட்டுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவற்றை பொருத்துவதற்கு இந்த கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பஸ் பாடி கட்டுமானத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயன்படுத்தப்பட வேண்டிய உதிரிபாகங்களிலும் சில விதிமுறைகளை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம், கர்நாடாக, கேரளா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் இந்த புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








