சென்னை, இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கிற்கு கிரேடு- 2 அந்தஸ்து!
சென்னை, இருங்காட்டுக்கோட்டை மோட்டார் பந்தய களத்திற்கு கிரேடு- 2 அந்தஸ்தை எஃப்ஐஏ அமைப்பு வழங்கியிருக்கிறது.
இந்தியாவின் பழமையும், பாரம்பரிய பெருமையும் கொண்ட மோட்டார் பந்தய களமாக இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் மெட்ராஸ் ரேஸ் டிராக் விளங்குகிறது.

இந்த நிலையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் என அழைக்கப்படும் இருங்காட்டுக்கோட்டை மோட்டார் பந்தய களத்திற்கு கிரேடு- 2 உரிமத்தை சர்வதேச மோட்டார் பந்தய சம்மேளனம்(FIA) வழங்கியுள்ளது.
இதையடுத்து, இருங்காட்டுக் கோட்டை பந்தய களத்தில் இண்டிகார், வேர்ல்டு என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப், டிடிஎம், ஜிடி ரேஸிங் உள்ளிட்ட பல்வேறு முதல்நிலை கார் பந்தயங்களை நடத்த முடியும். ஃபார்முலா- 1 போட்டிகளை நடத்த முடியாது.
கடந்த மூன்று ஆண்டுகளாக எஃப்ஐஏ அமைப்பின் ஆய்வாளர்கள் தொடர்ந்து இருங்காட்டுக்கோட்டை பந்தய களத்தில் ஆய்வுகளை நடத்தினர். பாதுகாப்பு, வசதிகள், நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து, இருங்காட்டுக்கோட்டை பந்தய களத்திற்கு கிரேடு- 2 உரிமத்தை எஃப்ஐஏ அமைப்பு வழங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் இருங்காட்டுக்கோட்டை பந்தய களத்தில் உலகின் முதல்நிலை மற்றும் பிரபலமான கார் பந்தயங்கள் நடப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகவும், மோட்டார் ரேஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவும் அமையும்.
நரேன் கார்த்திகேயன் மற்றும் கருண் சந்தோக் ஆகிய ஃபார்முலா- 1 வீரர்களை உருவாக்கிய பெருமையும் இந்த பந்தய களத்திற்கும், மெட்ராஸ் ஸ்போரட்ஸ் கிளப் அமைப்பிற்கும் உண்டு.
Source: Madras Sports Club


Click it and Unblock the Notifications








