கோவை ராலி கார் பந்தயத்திலும் டீம் மஹிந்திரா அணியினர் முதலிடம்!
இந்திய ராலி கார் சாம்பியன்ஷிப் பந்தயம் 6 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்று கோவையில் நடந்தது. 'ராலி ஆஃப் கோயம்புத்தூர்' என்ற பெயரில் நடந்த இந்த இரண்டாவது சுற்றில் டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணி முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் எக்ஸ்யூவி500 எஸ்யூவியை மஹிந்திரா அணியினர் பயன்படுத்தினர். கரடு முரடான சாலைகளில் கூட மிகச்சிறப்பான கட்டுறுதியுடன் அதிக பெர்ஃபார்மென்ஸை வழங்கிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவியால் மஹிந்திரா தொடர்ந்து இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறது.

ராலி ஆஃப் கோயம்புத்தூர் பந்தயத்தில் டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் வீரர் கவுரவ் கில் மற்றும் கோ டிரைவர் முசா ஷெரீஃப் ஆகிய இணை முதல் இடத்தை பிடித்தது. இதேபோன்று, டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் மற்றொரு வீரர் சன்னி சித்து மற்றும் கோ டிரைவர் பிவிஎஸ் மூர்த்தி அடங்கிய குழு மூன்றாவது இடத்தை பிடித்தது. இரண்டு ஜோடிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளையே பயன்படுத்தினர்.

கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடந்த இந்த போட்டியில் இரண்டு நிமிட இடைவெளியில் போட்டியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு கருவிகளும் போட்டியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தன.
மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்திய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள 4 சற்றுகள் சென்னை, பெங்களூர், கோல்கட்டா மற்றும் சிக்மகளூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications








