தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை பயன்படுத்த மஹிந்திரா திட்டம்
தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.
அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் அண்மையில் காப்புரிமை பெற்ற தனது எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை இலவசமாக யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. இதன்மூலம், சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்புப் பணிகள் துரிதமடையும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வழி பிறக்கும் என்றும் தெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் சாதக, பாதகங்களை கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அந்த வரிசையில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மஹிந்திராவும் தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.
இதுதொடர்பாக, மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்," தெஸ்லாவின் காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து இதுவரை ஆய்வு செய்யவில்லை. ஆனால், எங்களது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தெஸ்லாவின் தொழில்நுட்பங்கள் எந்தளவு பொருந்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது," என்று கூறினார்.
புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை வடிவமைக்கும் பணிகளில் மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான செலவீனம் வெகுவாக மிச்சப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








