பிள்ளையார் சுழி போட்ட மஹிந்திரா... இரண்டு விலை உயர்வுகளை சந்திக்க தயாராகும் கார் மார்க்கெட்!
அடுத்தடுத்து இரண்டு விலை உயர்வுகளை கார் மார்க்கெட் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்ய முடியாத நிலையில், உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி, விலை உயர்வை கையிலெடுக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதில், முதலாவதாக, மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தக மற்றும் தனிநபர் பயணிகள் வாகன மாடல்களின் விலையையும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், மாடலுக்கு தகுந்தவாறு ரூ.2,300 முதல் ரூ.11,500 வரை மஹிந்திரா கார் மாடல்கள் விலை உயர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, மாருதி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வை விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. வழக்கம்போல் ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்தால், பிற நிறுவனங்களும் பின்தொடரும். எனவே, பெரும்பாலான கார் நிறுவனங்கள் விரைவில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
இதுதவிர, கார்கள் மீதான உற்பத்தி வரிச்சலுகைக்கான காலக்கெடு வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. ஒருவேளை, வரிச்சலுகை நீடிக்கப்படாவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில், அதாவது புத்தாண்டிலும் விலை உயர்வை கார் நிறுவனங்கள் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு விலை உயர்வுகளை அடுத்தடுத்து கார் மார்க்கெட் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








