பெட்ரோல் எஞ்சினில் வீக்கா... கங்கணம் கட்டி இறங்கிய மஹிந்திரா: முழு விபரம்
டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் எஞ்சின் தொழில்நுட்பத்தில் அந்தளவு சிறப்பானதாக பெயரெடுக்கவில்லை.இந்த குறையை போக்கும் விதத்தில் புத்தம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை தயாரிக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியில் புத்தம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூம்பெர்க் டிவி நிகழ்ச்சியில் பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கோ இந்த தகவல்களை வெளியிட்டார். மஹிந்திராவிடமிருந்து வரும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய எஞ்சின்கள்
புதிய வரிசையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களும், 1.5 லிட்டர் எஞ்சினும் தற்போது தயாரிப்பில் உள்ளது. இதுதவிர, 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்கும் வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன என்று பவன் கோயங்கோ தெரிவித்தார். மொத்தமாக 7 புதிய எஞ்சின்களை வெளியிடும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

பகிர்மானம்
இந்த புதிய எஞ்சின்கள் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும், மஹிந்திராவின் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும். தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய எஞ்சின்களில் சில மஹிந்திரா வாகனங்களுக்கு ஏற்ற வகையிலும், சில எஞ்சின்கள் சாங்யாங் தயாரிப்புகளுக்கு ஏற்ற வகையிலும் உருவாக்கப்படுவதாக பவன் கோயங்கோ தெரிவித்தார்.

முதலீடு
புதிய எஞ்சின்களை உருவாக்குவதற்காக ரூ.700 கோடியை மஹிந்திரா முதலீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும். புதிய வரிசையில் உருவாக்கப்படும் இந்த எஞ்சின்கள் முதலில் சாங்யாங் நிறுவனத்தின் எக்ஸ்100 என்ற எஸ்யூவியில் பொருத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வராது.

இந்திய மாடல்
அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய மஹிந்திரா மாடலில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும். இது மூன்று சிலிண்டர் கொண்ட எஞ்சின்களாக இருக்கும். மேலும், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மாற்றங்கள் செய்து 1.2 லிட்டர் எஞ்சினாக இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், வரிச்சலுகையை பெற முடியும்.

புதிய காம்பேக்ட் எஸ்யூவி
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் எஸ்102 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் இந்த எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இந்த பெட்ரோல் எஞ்சின் 80 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அதேவேளை, இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்காது என்று பவன் கோயங்கோ தெரிவித்தார். இந்த புதிய டீசல் எஞ்சின் 2016ம் ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் என்று கூறினார்.

புதிய மாடல்கள்
எஸ்101 என்ற பெயரில் 4 மீட்டருக்கும் குறைவான 6 சீட்டர் மினி எஸ்யூவியை மஹிந்திரா தயாரித்துள்ளது. இதுதவிர, குவான்ட்டோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








