3 எஸ்யூவிகள் உள்பட 12 புதிய கார் மாடல்கள்: மாருதியின் அதிரடி ப்ளான்
அடுத்த 5 ஆண்டுகளில் 12 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி தற்போது நம் நாட்டு கார் மார்க்கெட்டில் பாதியளவு பங்களிப்பை கொண்டுள்ளது.
தனது மார்க்கெட் பங்களிப்பை தக்க வைக்கவும், அதனை கூடுதலாக்கும் வகையில் பல புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. டெல்லியிலுள்ள மாருதி தலைமை அலுவலகம் மற்றும் ஜப்பானிலுள்ள மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் தலைமையகத்தில் புதிய கொள்கைகளை வகுக்கும் பணிகளில் உயரதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தனது மார்க்கெட் பங்களிப்பை கணிசமாக உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய வாகன செக்மென்ட்டுகளில் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
கார்கள் மட்டுமின்றி வர்த்தக வாகனங்கள் மற்றும் புதிய வேன் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள கார்களில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள், புதிய டீசல் எஞ்சின்கள் மற்றும் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் கொண்ட மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.
குறிப்பாக, புதிய செக்மென்ட்டுகளில் களமிறங்க திட்டமிட்டிருக்கும் மாருதி 3 புதிய எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. அதில், முதலாவதாக எஸ் கிளாஸ் கிராஸ்ஓவர் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அடுத்ததாக, சமீபத்தில் பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விட்டாரா எஸ்யூவியை 2018ம் ஆண்டு இந்தியாவில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.
எம்பிவி செக்மென்ட்டில் மற்றொரு மாடலையும் மாருதி அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த புதிய எம்பிவி மாடல் எர்டிகாவைவிட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார்களின் அதிக சக்திகொண்ட மாடல்களையும் மாருதி விற்பனைக்கு கொண்டு வருகிறது.
இதற்கு ஏற்றவாறு ஆண்டுக்கு 25 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய மாருதி இலக்கு வைத்துள்ளது. இதற்காக, குஜராத்தில் 2 புதிய ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆலைகளை சுஸுகி நிறுவனம் நேரடியாக அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








