மும்பையில் இரண்டாவது கார் வாங்குவோர்க்கு கூடுதல் வரி: அரசு திட்டம்
மும்பையில், வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, இரண்டாவது கார் வாங்குவோர்க்கு கூடுதல் வரி விதிக்க மஹாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் வாகனப் பெருக்கத்தின் வேகம் கட்டுக்கடாங்காமல் செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனப் பெருக்கம் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய நேரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசலால் மும்பை ஸ்தம்பித்து விடுகிறது. நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டுள்ள அம்மாநில போக்குவரத்து துறை, வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அச்சம்
மும்பையில், கடந்த 7 ஆண்டுகளில் சராசரியாக வாகனப் பெருக்கம் 7 சதவீதமாக இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் பெரும் போக்குவரத்து பிரச்னைகளை மும்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

ரெண்டு கார்
மும்பையில், 15 சதவீதத்தினர் வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு இதுபோன்று இரண்டு கார்களுக்கும் மேல் வைத்திருப்பவர்களால்தான் அதிக பிரச்னை ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

கூடுதல் வரி
இரண்டாவது காருக்கு 100 முதல் 200 சதவீதம் வரை காரின் வகைக்கும், ரகத்துக்கும் தகுந்தாற்போல் கூடுதல் வரி விதிக்க மஹாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அங்கு கார்களுக்கு 13 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை உடனடியாக 39 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

யோசிப்பார்களா?
உதாரணமாக, பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஒருவேளை, புதிய வரிவிதிப்பு முறை அமலுக்கு வரும்போது, இரண்டாவது காருக்கு ரூ.21 லட்சம் வரை செலுத்த வேண்டி வரும். இதன்மூலம், இரண்டாவது கார் வாங்குவதிலிருந்து வாடிக்கையாளர்கள் பின்வாங்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த பூச்சாண்டிகளுக்கு மும்பைவாசிகள் அசங்குவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

மற்றொரு வரி
பார்க்கிங் கட்டணங்களை அதிகரிக்கவும், டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீது சிறப்பு வரி விதிக்கும் திட்டமும் மஹாராஷ்டிர அரசிடம் உள்ளது. இதன்மூலம், புதிய கார்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறை மற்றும் திட்டங்கள் குறித்த விரைவில் முதலமைச்சரின் அனுமதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








