7 மடங்கு அதிக மின் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி!
தற்போது இருக்கும் எலக்ட்ரிக் கார் மாடல்களில் முக்கிய பிரச்னை குறிப்பிட்ட தூரம் வரை செல்ல முடியும் என்பதே. சர்வதேச மார்க்கெட்டில் இப்போது இருக்கும் பல எலக்ட்ரிக் கார் மாடல்கள் கூட ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்வதே கடினம். மேலும், தற்போது லித்தியம் அயான் பேட்டரியே நவீன தொழில்நுட்பமும், செயல்திறனும் கொண்டதாக இருக்கிறது.
இதனால், எலக்ட்ரிக் கார்களுக்கு மாற்றாக ஹைட்ரஜனில் இயங்கும் ஃப்யூவல் செல் கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், லித்தியம் அயான் பேட்டரியை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறது டோக்கியோவை சேர்ந்த முன்னணி பொறியியல் ஆராய்ச்சி கல்வி நிலையம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகளைவிட இந்த பொறியியல் ஆராய்ச்சி கல்வி நிலையம் உருவாக்கியிருக்கும் புதிய லித்தியம் அயான் பேட்டரி 7 மடங்கு அதிக மின் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய லித்தியம் அயான் பேட்டரி ஒரு கிலோவுக்கு 2,570 watt-hours என்ற அளவில் மின் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்களைவிட இந்த புதிய லித்தியம் அயான் பேட்டரி மிகச்சிறப்பான எதிர்காலத்தை எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது அதிவிரைவாக சார்ஜ் ஆகும் என்பதுடன், உற்பத்தி செலவீனமும் அதிகம் இருக்காது என்கின்றனர் இதனை வடிவமைத்த வல்லுனர் குழுவினர். தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்திலான லித்தியம் அயான் பேட்டரி, வர்த்தக ரீதியில் கொண்டு வருவதற்கு சில காலம் பிடிக்கும். இதன்மூலம், எலக்ட்ரிக் கார்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








