இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்த என்சிஏபி வலியுறுத்தல்!
கிராஷ் டெஸ்ட் சோதனையில் பூஜ்யம் பெற்ற டட்சன் கோ காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துமாறு நிசான் நிறுவனத்தை என்சிஏபி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்களை கார் தர மதிப்பீட்டு அமைப்பான என்சிஏபி சமீபத்தில் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இதில், இந்த இரு கார்களும் பூஜ்யம் பெற்றன.

மேலும், டட்சன் கோ காரின் பாதுகாப்பு அம்சங்கள் மிக மோசமாக இருப்பதாகவும், குறிப்பாக வலியமையற்ற பாடி கட்டமைப்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது. டட்சன் கோ காரில் ஏர்பேக் பொருத்தினாலும், அது பாதுகாப்பை வழங்காது என்றும் என்சிஏபி தெரிவித்தது.
இது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்துமாறு என்சிஏபி அமைப்பின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, நிசான் தலைவர் மற்றும் சிஇஓ., கார்லஸ் கோஸ்னுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டட்சன் கோ காரின் பாடி கட்டமைப்பு மிகவும் வலியமையற்றதாக இருப்பதால், விபத்து ஏற்படும்பட்சத்தில் பயணிகள் உயிர் பிழைப்பது கடினம். ஏர்பேக் பொருத்தினாலும் பயன் தராது. எனவே, டட்சன் கோ கார் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி, அதன் பாடியை மறுவடிவமைப்பு செய்வது அவசியம்," என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேக்ஸ் மோஸ்லி கூறுகையில்," ஐ.நா வகுத்துள்ள குறைந்தபட்ச தர நிர்ணய அளவுகளைகூட டட்சன் கோ கார் எட்டவில்லை. இந்த காரை விற்பனைக்கு நிசான் அங்கீகரித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்திவிட்டு, பாடியை மறுவடிவமைப்பு செய்வது அவசியம்," என்று கூறினார்.
என்சிஏபி அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில்," வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் தர நிர்ணய விதிகளுக்குட்பட்டு, இந்திய கார்களை சோதனை செய்தால், குறைந்தபட்ச தர மதிப்பீடு கூட பெறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பாவில் தயாராகும் ஒரு கார் கூட பூஜ்யம் மதிப்பெண்ணை பெற்றதில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்துமாறு நிசான் நிறுவனத்தை என்சிஏபி அமைப்பு வலியுறுத்தியிருப்பது டட்சன் கோ கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதோடு, தங்களது முடிவை மறுபரிசீலித்து வருகின்றனர். இந்த செய்தி டட்சன் கோ கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








