எவாலியாவில் மீண்டும் மாற்றங்களை செய்யும் நிசான்... இந்த முறையாவது தேறுமா?
கடந்த 2012 செப்டம்பர் மாதம் எவாலியா எம்பிவி காரை மிகுந்த எதிர்பார்ப்புடன் நிசான் களமிறக்கியது. தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த டொயோட்டா இன்னோவா மார்க்கெட்டில் சிறிய அளவில் உடைத்தாலாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று நிசான் கணக்கு போட்டிருந்தது.
ஆனால், நிசான் கணக்குகளையும், கனவுகளையும் இந்திய மார்க்கெட்டில் பொய்யாக்கிவிட்டது எவாலியா. மேலும், எவாலியாவில் வாடிக்கையாளர்கள் கூறிய முக்கிய குறைகளை சரிசெய்து கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனாலும், அதே நிலைதான் நீடிக்கிறது. விற்பனையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில், எவாலியா எம்பிவி காரில் பல மாற்றங்களை செய்ய நிசான் முடிவு செய்துள்ளது. இதனை நிசான் தலைவர் கென்சிரோ யமுரா பிசினஸ் லைன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை களையும் விதமாக மிக அதிக மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் எவாலியா காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். இதுதவிர, சன்னி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்த ஆண்டு மத்தியிலும், டட்சன் பிராண்டில் கோ ப்ளஸ் எம்பிவி காரை இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








