இந்தியாவில் குறைந்த விலை எலக்ட்ரிக் காரை களமிறக்கும் நிசான்!
நம் அண்டை நாடான பூடானில் ஓடும் 5,000 வாடகை கார்களை முழுவதும் எலக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பூடானை சேர்ந்த தண்டர் மோட்டார்ஸ் என்ற எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து பெறுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக தண்டர் மோட்டார்ஸ் மற்றும் நிசான் இடையே கூட்டணி அமைந்துள்ளது. நிசான் லீஃப் காரின் அடிப்படையில் குறைவான விலை கொண்ட எலக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியில் இந்த இரு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் திட்டமிட்டுள்ளது.

குறைவான விலை
ரூ.19 லட்சத்தில் நிசான் லீஃப் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் புதிய எலக்ட்ரிக் காரை ரூ.10 லட்சத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் நிசான் ஈடுபட்டுள்ளது.

டட்சன் பிராண்டு
குறைவான விலை கார்களுக்கென தன் கைவசம் இருக்கும் டட்சன் பிராண்டில் புதிய எலக்ட்ரிக் காரை வெளியிடவும் நிசான் திட்டமிட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு வளரும் கார் மார்க்கெட்டுகளில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

போட்டி
மஹிந்திரா ரேவா நிறுவனம் மட்டுமே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா ரேவா இ2ஓ கார்களுக்கு போட்டியாக இந்த கார் வருகை தரும் என்று தெரிகிறது.

டேஸியா பிராண்டிலும்
நிசான் மற்றும் ரெனோ நிறுவனங்கள் சர்வதேச அளவிலான கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டட்சன் பிராண்டில் நிசான் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பது போன்றே, ரெனோ நிறுவனம் தனது குறைந்த விலை பிராண்டான டேஸியா பிராண்டிலும் புதிய எலக்ட்ரிக் காரை ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மாபெரும் திட்டம்
சுற்றுச் சூழலுக்கு குறைவான தீங்கு இழைக்கும் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மாபெரும் தொலைநோக்கு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டத்தின்படி, எலக்ட்ரிக் கார்களுக்கும், ஹைபிரிட் கார்களுக்கும் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, 20,000 கோடியை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது.

மானியம்
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது எலக்ட்ரிக் கார்களுக்கு அதிக மானியம் பெறும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இதன்மூலம், எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








