இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க பீஜோ திட்டம்: தமிழகத்தில் புதிய ஆலை திட்டம்
இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆலை அமைப்பது குறித்தும் அந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த பீஜோ கடந்த 2001ல் உறவை முறித்துக் கொண்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில், 2011ல் மீண்டும் இந்தியாவில் தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்தது. மேலும், குஜராத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் புதிய கார் ஆலையை நிறுவவும் முடிவு செய்தது.

புதிய கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டிவிட்ட நிலையில், தனது பொருளாதார நிலை சரியில்லை என்று கூறி புதிய ஆலை திட்டத்தை கைவிட்டது. இந்த நிலையில், மீண்டும் இந்திய கார் மார்க்கெட்டில் களமிறங்குவது குறித்து பீஜோ ஆய்வு செய்து வருகிறது.
புனேயிலிருந்து செயல்படும் பீஜோ நிறுவனத்தின் நிபுணர் குழு ஒன்று இந்திய மார்க்கெட்டில் பீஜோ நிறுவனத்திற்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து தற்போது ஆய்வுகள் செய்து வருகின்றது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்திய மண்ணில் மீண்டும் வர்த்தகத்தை துவங்க உள்ளது.
மேலும், தனது சர்வதேச பார்ட்னரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள கார் ஆலைகளை பயன்படுத்திக் கொண்டு முதலில் கார் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழகம் அல்லது மஹாராஷ்டிராவில் புதிய ஆலை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. குஜராத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கார் ஆலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்டதாகவும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








