எஸ்யூவி தயாரிக்க முடியாததற்கு ரோல்ஸ்ராய்ஸ் கூறும் காரணத்தை கேட்டீங்களா?
எஸ்யூவி கார் மாடல்கள் மீதான ஈர்ப்பு எகிறி வருவதால், பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய எஸ்யூவி மாடல்களை தயாரிப்பதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இந்த ஈர்ப்பு ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ போன்ற நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை.
புதிய எஸ்யூவி அறிமுகத்தை பென்ட்லீ உறுதிப்படுத்திவிட்டது. 2017ம் ஆண்டில் பென்ட்லீ எஸ்யூவி அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கும் எஸ்யூவி ஆசை இருப்பதை அந்த நிறுவனத்தின் சிஇஓ., சமீபத்தில் ஆட்டோகார் இதழுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால், தற்போது எஸ்யூவியை தயாரிக்க முடியாத நிலையில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, புதிய எஸ்யூவி தயாரிப்பதற்கு ஆலையில் போதிய இடமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சரி, புதிய ஆலை அமைக்க வேண்டியதுதானே என்ற கேள்வி எழலாம். ஆனால், அதற்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லையாம்.
இங்கிலாந்தின் குட்வுட் பகுதியில் 2003ம் ஆண்டில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஆலை அமைக்கப்பட்டது. முதலில் பாண்டம் காரையும், 2009 முதல் கோஸ்ட் காரையும் அங்கு தயாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே ஆலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரயீத் காருக்கும் இட ஒதுக்கீடு செய்தனர். இதனால், அந்த ஆலையில் புதிய கார் தயாரிப்பதற்கு இடமில்லையாம்.
மேலும், குட்வுட் பகுதியை விட்டு வேறு எங்கும் ஆலை திறக்க விரும்பவில்லை என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், புதிய எஸ்யூவி தயாரிப்பு குறித்து பரிசீலித்து வந்தாலும், தற்போது விற்பனை செய்யப்படும் பாண்டம், கோஸ்ட், ரயீத் ஆகிய கார்களின் விற்பனை நன்றாக இருப்பதால், புதிய எஸ்யூவி தயாரிப்பில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








