இனி ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ கையை நம்ப வேண்டியதில்லை!
இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தற்போது ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. பிரத்யேகம், தனித்துவம், சமூக மதிப்பு போன்ற காரணங்களால் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்க உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் மத்தியில் பேராவல் இருந்து வருகிறது.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கோஸ்ட், ஃபான்டம், ரயீத் கார்களை உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனை புதிய மைல்கல்லை எட்ட இருக்கிறது.

கைகொடுக்கும் கோஸ்ட்
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான மாடலான கோஸ்ட் கார் மாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ரோல்ஸ்ராய்ஸ் விரும்பிகளின் தாகத்தை தீர்த்து வைப்பதில் கோஸ்ட் கார் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக மிக சிறப்பான வளர்ச்சியை ரோல்ஸ்ராய்ஸ் பதிவு செய்து வருகிறது.

புதிய மைல்கல்
நடப்பு ஆண்டில் முதல்முறையாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனை 4,000 கார்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட இருக்கிறது. அதேவேளை, அதிக அளவில் கார்களை விற்பனை செய்ய ரோல்ஸ்ராய்ஸ் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், பிராண்டு மதிப்பை தக்க வைப்பதற்காக இந்த கொள்கையை ரோல்ஸ்ராய்ஸ் மனதில் வைத்து செயல்படுகிறது.

சிறப்பான வருவாய்
இந்த ஆண்டு கார் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 800 மில்லியன் டாலர் அளவு லாபத்தை ரோல்ஸ்ராய்ஸ் பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் புதிய முதலீடுகளுக்கான நிதி ஆதாரத்திற்காக தனது தாய் நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டியதில்லை.

சொந்தமாக தயாரிப்பு
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே சொந்தமாக புதிய மாடல்களை உருவாக்குவதற்கான நிதி ஆதாரம் ரோல்ஸ்ராய்ஸ் வசம் இருக்கும். எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய மாடல்களை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் எழுந்துள்ளது.

புதிய மாடல்கள்
விற்பனை வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில், புதிய மாடல்களை ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், புதிய தலைமுறை ஃபான்டம் காரையும், 2016ம் ஆண்டில் ரயீத் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர, ஆடம்பர எஸ்யூவியை தயாரிக்கும் திட்டமும் அந்த நிறுவனத்திடம் உள்ளது.


Click it and Unblock the Notifications








