ஆர்டிஓ., அலுவலகங்களுக்கு மூடுவிழா: மத்திய அரசு அதிரடி முடிவு
"லஞ்சம் தலைவிரித்தாடும் ஆர்டிஓ., அலுவலங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தப்படும்," என்று மத்திய அமைச்சர் நிகின் கட்காரி ஆவேசமாக பேசினார்.
புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

விழாவில் நிதின் கட்காரி பேசுகையில் கூறியதாவது,"
லட்ச, லாவண்யத்தில் உழன்று வரும் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் மூடப்படும். பழைய சட்டங்களை சட்டை செய்யாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம்.
வட்டார போக்குவரத்து அலுவலங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச, லாவண்யத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த சில மாதங்களில் ஆர்டிஓ., அலுவலகங்களுக்கு மாற்றாக செம்மையான நிர்வாகத்தை தரும் வகையில் முற்றிலும் புதிய போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ளது போன்று போக்குவரத்து விதிமீறுவோரின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமீறலுக்காக நோட்டீஸ் அனுப்பப்படும் நபர் நீதிமன்றத்தை அணுக முடியும். அதேவேளை, நீதிமன்றத்தில் விதிமீறியது உறுதி செய்யப்பட்டால் மூன்று மடங்கு அபராதத் தொகையை செலுத்த நேரிடும் என்று அவர் கூறினார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்துக்கு தக்கவாறு கடும் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தினால் மட்டுமே போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்கள் குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற ஆவலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








