டிரைவர்களின் தலையெழுத்தை மாற்ற வரும் பென்ஸ் தானியங்கி டிரக்குகள்!
ஓட்டுனரின் உதவியில்லாமல் செல்லும் தானியங்கி கார்களை பல முன்னணி கார் நிறுவனங்கள் சோதனை நடத்தி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் தானியங்கி கார்கள் வர்த்தக ரீதியில் சாலையில் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓட்டுனரின் துணையில்லாமல் இயங்கும் புதிய தானியங்கி டிரக்கை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சோதனை செய்து காலரை தூக்கிவிட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் சாலையில் 30 கிமீ தூரத்துக்கு இந்த புதிய டிரக் தானியங்கி முறையில் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. ஹைவே ஆட்டோபைலட் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த டிரக் எதிர்கால போக்குவரத்தில் புதிய புரட்சியை படைக்கும் என கருதப்படுகிறது.

புரோட்டோடைப் மாடல்
மெர்சிடிஸ் பென்ஸ் ஃப்யூச்சர் டிரக் 2025 என்ற பெயரில் இந்த ஆட்டோ பைலட் சிஸ்டம் தொழில்நுட்பம் கொண்ட டிரக் கான்செப்ட் மாடல் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது. மேலும், ஒரே ஒரு புரோட்டோடைப்தான் தயாரித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

வேகம்
மணிக்கு 85 கிமீ வேகத்தில் ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் இந்த டிரக் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ பைலட் சிஸ்டம்
நெடுஞ்சாலையில் செல்லும்போது ஒரு பொத்தானை அழுத்தினால் போதுமானது. ஆட்டோ பைலட் சிஸ்டம் செயல்பட துவங்கிவிட விடும். அதன் பின்னர் ஓட்டுனர் கை, கால்களை ஆற அமர வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் போதும். மேலும், இருக்கையை பின்னோக்கி தள்ளிவிட்டு படத்தில் இருப்பது போன்று 45 டிகிரி கோணத்தில் நகர்த்திக் கொண்டும் அமர்ந்து கொள்ளலாம். இருப்பினும், பாதுகாப்பு கருதி டிரைவர் கண்காணிப்பில் டிரக் செல்லும்.

தொடர்பு சாதனங்கள்
சென்சார்கள், நவீன கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உதவியுடன் டிரக் செல்லும். முன்னால் மற்றும் அருகில் வரும் வாகனங்கள் பற்றியும் அறிந்து கொண்டு இந்த டிரக் மிக பாதுகாப்பாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதி
பின்புறத்தில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் வாகனங்கள் வந்தால் இந்த டிரக் தானாகவே பாதுகாப்பான வழித்தடத்திற்கு மாறி வழிவிடும் என்பது இதன் சிறப்பம்சம்.

டேப்லட் கட்டுப்பாடு
அடுத்து எங்கு நிறுத்த வேண்டும் என்பதையும் இந்த ஆட்டோ பைலட் சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் டேப்லட் கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் போதுமானது. சரியான இடத்தில் டிரக் நின்றுவிடும். ரிவர்ஸ் பார்க்கிங் செய்வதற்கும் இந்த டேப்லட் போதுமானது. இந்த டேப்லட் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு முன்னரே வேண்டிய உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

மற்றொரு வசதி
உதாரணத்திற்கு குளிர்சாதன வசதி கொண்ட டிரெய்லரை இந்த டிரக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், டிரெய்லரின் கேபினுக்குள் குளிர்சாதனத்தை முன்கூட்டியே இயங்க செய்ய முடியும். இந்த ஹைவே ஆட்டோ பைலட் சிஸ்டம் எதிர்காலத்தில் டிரக் டிரைவர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.

டெய்ம்லர் ஏஜி
உலகின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் ஏஜி விளங்குகிறது. இந்தியாவில் பாரத் பென்ஸ் என்ற பிராண்டு பெயரில் வர்த்தக வாகனங்களை டெய்ம்லர் ஏஜி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் உள்ள ஆலையில் பாரத் பென்ஸ் டிரக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








