கார்கள் மீதான உற்பத்தி வரி குறைப்பு: வாகன துறையினர் வரவேற்பு
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டிருப்பதற்கு, வாகன துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு, வட்டி விகிதம் உயர்வு, பொருளாதார சுணக்க நிலை போன்றவற்றால் வாகன துறையின் வளர்ச்சியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வாகன தயாரிப்பு துறைக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று சியாம் அமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். அதில், வாகன தயாரிப்பு துறைக்கான உற்பத்தி வரியை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறிய கார்கள், நடுத்தர கார்கள், எஸ்யூவி ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஒட்டுமொத்த வாகன தயாரிப்பு துறையும் வரவேற்பை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், வாகன மார்க்கெட்டின் வளர்ச்சி ஏற்படுவதற்கான வழி ஏற்பட்டுள்ளதாக முன்னணி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், மூலதனப் பொருட்களின் மீதான வரியும் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது உற்பத்தி துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில்," மத்திய பட்ஜெட்டில் வாகனங்களின் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டிருப்பதன் மூலம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வாகன விற்பனையை அதிகரித்து, மார்க்கெட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








