டிரைவர் கவனத்தை திசை திரும்புவதை தவிர்க்கும் ஜேஎல்ஆரின் புதிய தொழில்நுட்பம்!
கார்களுக்கான புதுமையான வசதிகளை அறிமுகப்படுத்துவதில் போட்டா போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம்(ஜேஎல்ஆர்) புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
டிரைவரின் கவனத்தை திசை திருப்புவதாக கருதப்படும் சில பணிகளை இந்த புதிய தொழில்நுட்பம் செய்துவிடும். இதனால், விபத்துக்களை குறைக்க முடியும் என ஜேஎல்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 'Self Learning Vehicle' என்ற பெயரில் கார்களில் வர இருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் காரை ஓட்டுபவர்களின் ஓட்டுதல் முறை மற்றும் அவர்கள் விரும்பும் வசதிகளை கண்காணித்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படும்.

ஓட்டுபவர் காருக்கு அருகில் வருவதை ஸ்மார்ட்போன் வாயிலாக தெரிந்துகொண்டு காரின் கதவை திறப்பது, அவருக்கு தகுந்தாற்போல் இருக்கை மற்றும் ஸ்டீயரிங், ரியர் வியூ கண்ணாடியை அட்ஜெஸ்ட் செய்வது உள்ளிட்ட பணிகளை இந்த புதிய தொழில்நுட்பம் முன்கூட்டியே செய்துவிடும். மேலும், காருக்குள் ஏசி அளவையும் சரிசெய்து விடும் என்பதோடு, உரிமையாளருக்கு இருக்கும் அன்றாட பணிகள் குறித்தும், முக்கிய நிகழ்வுகள் குறித்து நினைவூட்டும் வசதியையும் வழங்கும்.
மழை வந்துவிட்டால் அதற்கு தகுந்தாற்போல் ஓட்டுதல் நிலையை மாற்றும். வானிலை நிலவரம், போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களையும் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் பெறலாம். ஓட்டுனர்களின் கவனத்தை திசை திரும்புவதை தவிர்க்கும் என்பதால் விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்று ஜேஎல்ஆர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








