டாடா நானோ டீசல் அறிமுகமாவதில் நீடிக்கும் குழப்படிகள்!
அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நானோ டீசல் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், நானோ டீசல் கார் அறிமுகமாவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு நானோ டீசல் வருவது உறுதியற்றதாகவே இருக்கிறது.

சோதனை ஓட்டம்
நானோ காருக்கான டீசல் எஞ்சினை பாஷ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த எஞ்சினுடன் நானோ டீசல் கார் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், திடீரென நானோ டீசல் காரின் திட்டத்தை கைவிட டாடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புருவத்தை உயர்த்தும் மைலேஜ்
லிட்டர் டீசலுக்கு 35 கிமீ.,க்கு மேல் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டது. இது நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வந்தது.

டீசல் விலை
டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதும், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்ததும் டீசல் கார்கள் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. எனவே, நானோ டீசல் கார் மார்க்கெட்டில் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது டாடாவுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

பிஎஸ்-4 எஞ்சின்
பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட டீசல் எஞ்சின் தயாரிப்புக்கான செலவீனம் மிக அதிகம். எனவே, நானோ டீசல் காரின் விலையும் மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறுமா என்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. இதனால், நானோ டீசல் திட்டத்தை கைவிடும் அளவுக்கு டாடா யோசித்து வருகிறதாம்.

இரு வகை டீசல் எஞ்சின்
அதேவேளை, டாடா நானோ காருக்கு 2 சிலிண்டர் மற்றும் 3 சிலிண்டர்கள் கொண்ட இரண்டு வகையான டீசல் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை நானோ டீசலில் பொருத்தி அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை டாடா அலசி வருவதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த குழப்பத்தாலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு நானோ கார் வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








