நானோ கார் ஆலையை ஒரு மாதத்திற்கு மூடிய டாடா மோட்டார்ஸ்!
நானோ காரின் இருப்பு அதிகமாக இருப்பதாலும், தேவை குறைந்துவிட்டதாலும் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது டாடா மோட்டாரஸ்.
குஜராஜ் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நானோ காரின் விற்பனை மிக மோசமாக இருந்து வருவதால் இருப்பு அதிகரித்து விட்டது.

இதையடுத்து, 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை சனந்த் ஆலையில் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இதுதொடர்பாக விளக்கமளித்த டாடா உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," ஆண்டு பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக நானோ கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனிடையே, நானோ கார் ஆலையில் ஏற்பட்டு வரும் உற்பத்தி இழப்பை ஈடுகட்டும் விதத்தில் கைட் என்ற புதிய ஹேட்ச்பேக் காரையும், புதிய காம்பேக்ட் செடான் காரையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய கார்களுக்கு தகுந்தவாறு உற்பத்தி பிரிவுகளில் மாற்றங்களை செய்வதற்காக தற்போது நானோ கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களாக சனந்த் ஆலையில் வாரத்திற்கு சராசரியாக 3 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறதாம். இந்த நிலையில், நானோ காரின் இருப்பு அதிகரித்து வருவதால் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காகவும் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








