நானோ டீசல் கார் திட்டத்தை கைவிட டாடா மோட்டார்ஸ் முடிவு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா நானோ டீசல் கார் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கைவிட முடிவு செய்துள்ளது.
வர்த்தக ரீதியில் நானோ டீசல் காரை அறிமுகப்படுத்துவதில் சாத்தியக்கூறுகள் மிக குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ளது.

புதிய 800சிசி டீசல் எஞ்சின்
டாடா நானோ டீசல் காரில் பொருத்துவதற்காக பாஷ் நிறுவனம் 2 சிலிண்டர் 800 சிசி டீசல் எஞ்சினை உருவாக்கியது. இந்த எஞ்சினுகக்கு ஹனிவெல் நிறுவனம் டர்போசார்ஜரை சப்ளை செய்வதாக இருந்தது.
குறிப்பு: மாதிரிக்காக நானோ ட்விஸ்ட் காரின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காரணம்?
நானோ டீசல் காருக்கான பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எஞ்சினை உருவாக்குதற்கான உற்பத்தி செலவீனம் மிக அதிகமாக இருந்துள்ளது. இதுதான் நானோ டீசல் கார் திட்டத்தை டாடா கைவிட முடிவு செய்ய முதன்மையான காரணம்.

சூடு பட்டது போதும்
உற்பத்தி செலவீனம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் போது போட்டியாளர்களைவிட நானோ டீசல் காரின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டியிருக்கும். எனவே, மீண்டும் நானோ காரால் ஒரு சூடுபடுவதை தவிர்த்து கொள்ளும் விதத்தில் இந்த திட்டத்தை கைவிட டாடா முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மற்றொரு காரணம்
நானோ டீசல் கார் திட்டத்தை துவங்கும்போது இருந்ததைவிட தற்போது டீசல் விலை 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, டீசல் கார்களுக்கு மவுசு குறையத் துவங்கியுள்ளதும் டாடாவின் இந்த முடிவுக்கு மற்றொரு காரணம்.

ஏமாற்றம்
ஒரு லிட்டர் டீசலுக்கு நானோ கார் 35 கிமீ வரை மைலேஜ் செல்லும் என்று தெரிவிக்கப்ட்டது. இதனால், இந்த காரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வர்த்தக ரீதியில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை கருத்தில்கொண்டு நானோ கார் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கைவிட உள்ளதாக வெளியான தகவல் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications







