விறுவிறுப்பாக நடந்த டாடா டிரக் பந்தயம்: படங்களுடன் விபரங்கள்
டெல்லியில் நேற்று விறுவிறுப்பாக நடந்த முதல் டாடா டிரக் பந்தயத்தில் கேஸ்ட்ரால் வெக்டன் அணி வீரர் ஸ்டூவர்ட் ஆலிவர் சாம்பியன் ஆனார். இதேபோன்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கேஸ்ட்ரால் வெக்டன் அணி பெற்று அசத்தியிருக்கிறது.
டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் 2.1 கிமீ தூரத்துக்கான பந்தய களத்தில் இந்த டிரக் பந்தயம் நடந்தது. பந்தயத்துக்கு ஏற்ற வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டிருந்த 12 டாடா பிரைமா 4038 எஸ் ரக டிரக்குகள் பந்தயத்தில் பங்கேற்ற அணிகள் பயன்படுத்தின. அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டவையாக இருந்தன.
இதுகுறித்து இந்த ஆண்டு சாம்பியன் ஸ்டூவர்ட் ஆலிவர் கூறுகையில், " இது ஒரு அற்புதமான அனுபவம். பந்தய களம் மிக சிறப்பாக இருந்ததோடு,டிரக்குகளும் சிறப்பான செயல்திறனை காட்டின. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் இதுபோன்ற மோட்டார் பந்தயங்களுக்கு பெரிய வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என்று தெரிகிறது," என்றார்.

இரண்டு சுற்று பந்தயம்
இந்த சாம்பியன்ஷிப் இரண்டு பந்தயங்களை கொண்டதாக நடத்தப்பட்டது. 5 சுற்றுகள் கொண்ட ஸ்பிரிண்ட் என்ற ஒரு பந்தயமும், 15 சுற்றுகளை கொண்ட முக்கிய பந்தயமும் நடத்தப்பட்டன.

பாயிண்டுகள்
ஸ்பிரிண்ட் மற்றும் முக்கிய பந்தய சுற்றுகளில் வீரர்கள் மற்றும் அணிகளின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டன.

பார்வையாளர்கள் ஆர்வம்
முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த இந்த டிரக் பந்தயத்தை காண்பதற்காக 25,000 பார்வையாளர்கள் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் குழுமியிருந்தனர். மொத்தம் 45 நிமிடங்கள் பந்தயம் நடந்தது.

அனுபவ வீரர்கள்
டாடா டி1 பிரைமா டிரக் ரேஸிங்கிற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டிரக்குகளை இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஓட்டினர்.

போடியத்தில் ஏறிய வீரர்கள்
பரபரப்பாக நடந்த இந்த பந்தயத்தின் இறுதியில் கம்மின்ஸ் அணியை சேர்ந்த மேட் சம்மர்ஃபீல்டு மூன்றாவது இடத்தையும்(இடது புறம் இருப்பவர்), ஸ்டூவர்ட் ஆலிவர் முதலிடத்தையும்(நடுவில் இருப்பவர்), டாடா டெக்னாலஜீஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை சேர்ந்த டேவிட் ஜென்கின்ஸ் இரண்டாவது இடத்தையும்(வலதுபுறம் இருப்பவர்) வென்றனர்.


Click it and Unblock the Notifications








