டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் டீசல் கார்களுக்கு ரீகால்!
எஞ்சின் ஆயில் கசிவு பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கரொல்லா ஆல்டிஸ் காரின் டீசல் எஞ்சினில் ஆயில் கசிவு ஏற்பட்டு, ஏர்- இன்டேக்கிற்குள் செல்லும் அபாயம் இருப்பதை டொயோட்டா கண்டறிந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2011ம் ஆண்டு மே மாதம் வரை தயாரிக்கப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரின் டீசல் மாடலை திரும்ப அழைக்க உள்ளது.

சம்பந்தப்பட்ட கார்களில் குறைபாடு கொண்ட பாகத்தை சர்வீஸ் மையங்களில் இலவசமாக மாற்றித் தர உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. மொத்தம் 5,834 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் டீசல் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக, டீலர்கள் வழியாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று டொயோட்டா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் டீசல் கார்களில் டிரைவ்சாஃப்ட்டில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக டொயோட்டா திரும்ப பெறும் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








