தொழிலாளர் பிரச்னை: பெங்களூர் டொயோட்டா ஆலையில் கார் உற்பத்தி திடீர் நிறுத்தம்!
தொழிலாளர் போராட்ட அச்சத்தால், பெங்களூர் அருகேயுள்ள டொயோட்டா கார் ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் 2 கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு ஆலைகளிலும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 700 கார்கள் உற்பத்தி செய்யபப்படுகின்றன.

இந்த நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக டொயோட்டா நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஊதிய பிரச்னை காரணமாக அந்த ஆலைகளில் எந்த நேரத்திலும் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக 2 ஆலைகளிலும் நேற்று முதல் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்," வேறு வழி இல்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளோம். தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் பாதுகாப்பு கருதி ஆலையை தற்காலிமாக மூடியுள்ளோம்.
பிரச்னையை சுமூக தீர்ப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
இந்த இரு கார் ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், டொயோட்டா கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையில் ஊதிய உயர்வு பிரச்னை காரணமாக பெரும் வன்முறை வெடித்தது. தொழிலாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், ஒரு அதிகாரி பலியானதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த அச்சம் காரணமாக தற்போது டொயோட்டா நிறுவனம் கார் ஆலைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








